சென்னையில், தெலுங்கு நடிகர் சோபன்பாபு சிலையை அகற்ற முயன்ற தமிழர் முன்னேற்ற படை நிர்வாகிகள் கைது

திங்கள், 15 ஜூன் 2015 (23:14 IST)
சென்னையில், தெலுங்கு நடிகர் சோபன்பாபு சிலையை அகற்ற முயன்ற, தமிழர் முன்னேற்ற படை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் திருவுருவ சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அகற்றியது.
 
தமிழக அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போரட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் திருவுருவ சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும், சென்னையில் உள்ள தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டமும், சென்னை மேத்தா நகர் நெல்சன் சாலையில் ஜூன் 15 ஆம் தேதி திங்கள்கிழமை காலை நடைபெறும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமி அறிவித்தார்.
 
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், சென்னை மேத்தா நகர் நெல்சன் சாலையில்யில் உள்ள சோபன் பாபுவின் சிலை அருகே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டியிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்