பள்ளி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவன் கைது

புதன், 17 டிசம்பர் 2014 (10:26 IST)
குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவனை காவல்துறையினர் ஓசூரில் பிடித்துள்ளனர்.
 
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள முனுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் கூலி தொழிலாளி. இவரது 2வது மகள் கீர்த்திகா (11). இவர் மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்திகா வழக்கம் போல் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர்.
 
இந்நிலையில், கல்யாண பெருங்குப்பம் பகுதியில் முட்புதருக்குள் கீர்த்திகா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
 
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வந்த மாச்சனூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து அந்த மாணவனை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், ஓசூர் அருகே தலைமறைவாக இருந்த அந்த மாணவனை தனிப்படை காவல்துறையினர் பிடித்து குடியாத்தம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்