முதல்வர் கார் மீது மோதுவது போல் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்: புதுவையில் பரபரப்பு

சனி, 13 பிப்ரவரி 2016 (15:39 IST)
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டமன்ற அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்தார். அப்போது அவரது கார் சட்டமன்ற நுழைவாயிலில் வந்தபோது ஒரு வாலிபர் சட்டமன்ற வளாகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்தார். இதனைக் கண்ட ரங்கசாமியின் கார் டிரைவர் காரை திடீர் பிரேக் போட்டார். இதனால் முதல்வர் ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர், ரமணாபுரத்தை சேர்ந்த திலீப் (29) என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் என்று திலீப்பின் தாய் கூறியுள்ளார். இதையடுத்து வாலிபரை அவரது தாயாருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்