தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக ஆட்சி நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது - ராமதாஸ்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (15:37 IST)
தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக ஆட்சி நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
கோவையில் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு ஜனநாயக கட்சி உண்ணாவிரதம் மேற்கொண்டது. இந்த உண்ணாவிரதத்தை ராமதாஸ் தொடங்கி வைத்து பேசிய ராமதாஸ்,  “1957ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இன்னும் அது நடந்தபாடில்லை. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நிச்சயம் மதுவிலக்கு அமலுக்கு வரும். அப்போது தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்" என்று கூறினார். 
 
மேலும், "தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக ஆட்சி நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றது முதல் எந்த பணிகளும் நடைபெறவில்லை. பன்னீர்செல்வம் நல்லவர். ஆனால் அவர் வல்லவராக செயல்பட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. தேவையற்ற அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் செயல்பட முடியாத சூழல் நிலவுகிறது"  என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்