தேர்வுகளை ரத்து செய்யுங்க.. எல்லாருக்கும் பாஸ் மார்க் போடுங்க! – ராமதாஸ் கோரிக்கை!

வியாழன், 19 மார்ச் 2020 (13:24 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்தது போல தமிழக தேர்வுகளையும் ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கும், மெட்ரிகுலேசன் மாணவர்களுக்கும் குறிப்பிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து தனது ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்