“மேன் வெர்சஸ் வைல்ட்” நிகழ்ச்சியில் என்ன ஆனது? – உண்மையை சொன்ன ரஜினி!

புதன், 29 ஜனவரி 2020 (08:54 IST)
மேன் வெர்சஸ் வைல்டில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் காயம்பட்டு வெளியேறி விட்டதாக கூறப்படும் நிலையில் உண்மை நிலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. காட்டுக்குள் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் காட்டில் உள்ள பொருட்களை உண்டு, அங்குள்ளவற்றை வைத்தே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு பயணித்து அங்கிருந்த்து தப்பிப்பார்.

பிரபலமான இந்த தொடரில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த தொடர் இந்தியா முழுவதும் பரவலாக பாராட்டுகளை பெற்றது. தற்போது மேன் வெர்சஸ் வைல்ட் தொடரில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பியர் க்ரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த் காட்டுக்குள் பயணிக்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன.

இந்நிலையில் ரஜினிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ”மேன் வெர்சஸ் வைல்ட் ஷூட்டிங் பந்திப்பூரில் நடந்து முடிந்தது. அதை முடித்து விட்டுதான் வருகிறேன். எனக்கு அடிபட்டு விட்டது என்று சொன்னார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. சில முட்கள் குத்தின அவ்வளவுதான்” என கூறியுள்ளார்.

ரஜினிக்கு அடிபட்டு விட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் ரஜினியின் இந்த பதில் அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்