20 தொகுதி இடைத்தேர்தல்! ரஜினி, கமலுக்கு அருமையான வாய்ப்பு..

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:30 IST)
இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தங்களது பலத்தை காட்ட கமல், ரஜினிக்கு  இந்த 20 தொகுதி இடைத்தேர்தல் நல்ல வாய்ப்பு என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

 
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு சரிதான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால்  அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளதால் 20 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சி திமுகவும் இந்த தேர்தலை எதிர்பார்தது காத்திருக்கின்றன.
 
இந்நிலையில தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்கள். ஒரு பக்கம் இருவருமே படத்தில் நடித்தாலும் கட்சி வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்  வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருதி இவர்கள் அரசியல் களத்தில் தைரியமாக குதித்து உள்ளார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல், சட்டமன்ற  தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். 
 
நடிகர் கமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்தள்ள நிலையில, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கக்கூடும். இவர்கள் இருவருக்குமே சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களம் இறங்கியுள்ள ரஜினி, கமல் இருவருக்குமே, இப்போது வரஉள்ள 20 தொகுதி இடைத்தேர்தல் நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த 20 தொகுதியில் மக்களிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை சோதித்து பார்த்தால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள இயலும். எனவே இந்த வாய்ப்பை ரஜினி, கமல் பயன்படுத்துவார்களா என்பதே தற்போதைய பெரும் கேள்வி?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்