மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா

புதன், 25 நவம்பர் 2015 (11:59 IST)
சுவர் இடிந்து, வெள்ளத்தில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பி.மேட்டுப்பாளையம் "அ" கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் தங்கராஜ், சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ராஜி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆஜிபாஷா மகன் சுவேல் அகமது; அபீப்பாஷா மகன் ரகுமான் பாஷா ஆகிய இருவரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
ஆம்பூர் வட்டம், கடலைகுளம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மகள் ஷர்மிளா வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
உயிரிழந்த இந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்