குஷ்பூ மீது வழக்குப்பதிவு : அனுமதி பெறாததால் காவல்துறை நடவடிக்கை

புதன், 4 மே 2016 (16:15 IST)
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து பேசினார்.
 
பின்னர், அவர் களியக்காவிளை அருகே விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட குழித்துறை பகுதிக்கு சென்றார். அங்கு விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து பேசினார்.
 
இதற்கிடையே குழித்துறை பகுதியில் பிரசாரம் செய்ய முறையாக அனுமதி வாங்கவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதன் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி ஆகியோர் மீது, அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக களியக்காவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்