ஆபரேஷனை தள்ளிப்போட்ட கர்ப்பிணிக்கு ரோட்டோரத்தில் சுகபிரசவம்

வியாழன், 24 நவம்பர் 2016 (10:40 IST)
நாகர்கோவில் அருகே ஆபரேஷனை தவிர்த்த நிறைமாத கர்ப்பிணிக்கு சாலையோரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


 
 
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(37).  இவர் பிரசவத்துக்காக கடந்த 20ம்தேதி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடன் அவரது 2 குழந்தைகளும் மருத்துவமனையில்  இருந்தனர். உறவினர்கள் யாரும் அவருடன் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பேச்சியம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், ‘உனக்கு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும்’ என கூறினார். இதனால் பயந்து போன பேச்சியம்மாள் மருத்துவமனையில் இருந்து குழந்தைகளுடன் வெளியேறினார். 
 
ஊருக்கு செல்வதற்காக, மருத்துவமனையின் பின்புற கேட் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வயிற்று வலி வந்தது. வலியால் துடித்த பேச்சியம்மாளுக்கு ரோட்டோரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேச்சியம்மாள் அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்