கத்தி திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, சென்னையில் சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது கற்களை வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கத்தி படத்தை வெளியிடுவதைத் தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர்.
கத்தியை எதிர்க்கும் விதமாக. சென்னையின் பிரபல சத்யம் திரையரங்குக்கு நேற்றிரவு வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கண்ணாடி கதவுகள் மீது கற்களை வீசி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மேலும் பெட்ரோல் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். கத்தி திரைப்படத்துக்கு வைக்கப்பட்டு இருந்த பேனர்களையும் அவர்கள் கிழித்து எரிந்தனர். தடுக்க வந்த திரையரங்கு காவலாளியையும் அவர்கள் தாக்கினர். இதில் திரையரங்கின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.