காந்தியவாதி சசிபெருமாள் மரணம்; தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன், 5 ஆகஸ்ட் 2015 (22:55 IST)
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் மர்மம் உள்ளதாக, அவரது மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.


 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியவர் காந்தியவாதி சசிபெருமாள்.

கடந்த வாரம், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய போது உயிரிழந்தார். இதில் சசிபெருமாள் மரணத்தில் மர்மம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.
 
இந்நிலையில், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே, இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்