அபராதம் விதிப்பு... ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.! நடிகர் பிரசாந்த்.!!

Senthil Velan

சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
எனக்கு அபராதம் விதித்ததன் மூலம் பொதுமக்கள் இடையே ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என நடிகர் பிரசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரசாந்த். ஜூன்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அவர் தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், அன்றைய தினம் பல படங்கள் வெளியாவதால் ஒரு வாரம் முன்னதாகவே அந்தகன் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நடிகர் பிரசாந்த் அந்தகன் பட புரமோஷனில் பிஸியாகி இருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.

அதன்படி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.  தொகுப்பாளினியுடன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபடி நடிகர் பிரசாந்த் பேட்டி அளித்திருந்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன
 
இதை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு சேர்த்து 2 ஆயிரம் ரூபாயை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அபராதமாக விதித்தது.

ALSO READ: மக்களே ரெடியா.! கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்..!
 
இந்நிலையில் எனக்கு அபராதம் விதித்ததன் மூலம் பொதுமக்கள் இடையே ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் என நடிகர் பிரசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முழுவதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை நல்ல விஷயமாக பார்க்கிறேன் என்று நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்