பஞ்சு அருணாசலம் உடல் தகனம்

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (17:43 IST)
மறைந்த பிரபல சினிமா கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலத்தின் உடல், மின்சார இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


 

 
1941ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பஞ்சு அருணாசலம். பின்னர், அவரே பல திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும் உள்ளார். தான் தயாரித்த அன்னக்கிளி திரைப்படத்தில், இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.
 
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். 
 
பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், கல்யாணராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார். அவரின் உடலுக்கு பொதுமக்களும், பல்வேரு சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
 
அதன்பின் இன்று அவரின் உடல், அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கண்ணம்மாபேட்டையில் உள்ள மின்சார இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்