இளையராஜாவை விமான நிலையத்திற்குள் அனுமதிக்காத அதிகாரிகள் - ரசிகர்கள் கோபம்

செவ்வாய், 7 ஜூன் 2016 (10:37 IST)
இந்திய இசை மேதைகளுள் ஒருவரான இசைஞானி இளையராஜாவை விமான நிலையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்காத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்டோரை சோதனை செய்தனர்.
 
சோதனையில் அவர் கொண்டுவந்த பையில் தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து பிரசாதப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
 
மேலும், விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்துள்ளார். கார்த்திக்ராஜா படம் எடுத்ததைப் பார்த்த அதிகாரிகள் அவர்களை மேலும் ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்திருக்கின்றனர்.
 
கடைசியாக கார்த்திக் ராஜாவின் மொபைலில் இருக்கும் படங்களை அழிக்கச் சொல்லிவிட்டு கிளம்ப அனுமதித்திருக்கின்றனர். முதல் முறையாக பிரசாதப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை பாதுகாப்பு அறையில் 1 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
 
உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்களாலும், இந்திய சினிமா ஜாம்பவான்களாலும், தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் இளையராஜா அவர்களை விமான நிலைய அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் காக்க வைத்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்