ஜெயலலிதா சமாதியில் இரவில் மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்.

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (22:41 IST)
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இரவில் மவுன அஞ்சலி செலுத்தியது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா விரைவில், தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு இன்னும் திரும்பவில்லை. இதனால், பதவியேற்கும் வைபோகம் தள்ளிப் போகிறது.
 
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தார்.
 
முன்னதாக போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடன் தமிழக அமைச்சர்கள் சிலர் ஆலோசனை நடத்தினர். அதில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரவில் தனியாக ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்