ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை: வைகோ

ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (15:02 IST)
நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

 
நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைப்பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் திமுக கட்சியினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஓ.பி.எஸ். அணியினர் விழாயன் முதல் இந்த கோரிக்கை முன்வைத்து வந்தனர். ஆனால் சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடக்கவில்லை.
 
இதுகுறித்து மதிமுக தலைவர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
 
நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3ஆம் தேதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை கொண்டோரும், தமிழக மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்