வீடு கட்ட அலையத் தேவையில்லை! எந்த செலவும் இல்லை! - தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

Prasanth Karthick

திங்கள், 22 ஜூலை 2024 (13:11 IST)

நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் விதமாக வீடு கட்ட ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து உடனடி அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சொந்தமாக வீடு கட்டுவது என்பது ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் கனவாக உள்ளது. அவ்வாறு வீடு கட்டும்போது அதற்கான கட்டட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி 3500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் வீடுகள் உடனடி அனுமதியை பெற முடியும். வீடு கட்ட அனுமதி பெற விரும்புபவர்கள் https://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் விவரங்கள் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். இதற்காக எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையத் தேவையில்லை.

மேலும் இந்த ஆன்லைன் அனுமதி பெறுபவர்களுக்கு, கட்டட பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதி கட்டணங்களில் இருந்தும் 100 விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீடு கட்டும் முயற்சியில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்