நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், கூடுதல் சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 30–வது நாளாக இன்று வேலைக்கு செல்லவில்லை.
அதன்படி இன்று (3 ஆம் தேதி) காலையில் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். இதனால் அப்பகுதியிலும், என்.எல்.சி. 2–வது சுரங்கம் முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறே ஒப்பந்த தொழிலாளர்களின் பேரணி என்.எல்.சி. 2–வது சுரங்கம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சிறப்பு தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் ஸ்டாலின் ஹென்றி, பழனிவேல், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த அன்பழகன், தேவராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.