அடைகாக்கும் காலம் முடிந்து அதாவது சுமார் 58 நாட்கள் கழித்து 36 இந்திய மலைப்பாம்பு குட்டிகள் முட்டையிலிருந்து வெளி வந்தன. பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ ஆகும். முட்டைகளை அடைகாப்பதோடு மலைப்பாம்புகளின் தாய்மைப் பண்பு முடிவுக்கு வருகிறது. குட்டிகளைப் பராமரிக்கும் பண்புகள் மலைப்பாம்புகளிடம் இல்லை.
இந்திய மலைப்பாம்புகள் மிகவும் அழிநிலையில் உள்ள விஷமற்ற பாம்பினமாகும். இது சராசரியாக 4 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முழு வளர்ச்சியடைந்த பாம்பு சுமார் 50 கிலோ எடை உடையது. இவை இந்திய துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்பட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
மேற்படி குட்டிகள் பிறந்த ஒரிரு வாரங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ளாது. அதன் பிறகு குட்டிகளுக்கு பூங்காவிலுள்ள எலிகள் இனப்பெருக்க மையத்திலிருந்து ஒரு வாரம் வயதுள்ள எலிக் குட்டிகள் உணவாக வழங்கப்படும். மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.