வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கு - திமுக எம்எல்ஏ விடுதலை

வெள்ளி, 22 மே 2015 (14:09 IST)
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் இருந்து பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ மைதீன்கான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
 
நெல்லை, பாளையங்கோட்டை திமுக  எம்எல்ஏவாக இருப்பவர் டி.பி.எம்.மைதீன்கான். திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இவர், சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  
 
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், திமுக எம்எல்ஏ மைதீன்கான் மீதான குற்றச்சாட்டு, காவல்துறை தரப்பில் முறையாக நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்