ஓட.. ஓட... வாலிபரை விரட்டி குத்திக் கொன்ற மர்ம கும்பல்

திங்கள், 5 அக்டோபர் 2015 (15:06 IST)
கோவையில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபர் ஒருவரை ஓட, ஓட விரட்டி குத்திக் கொன்றுள்ளது.
 

 
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த தொழிற் சங்க மண்டல துணைத்தலைவர் தண்டபாணியின் மகன் ராஜேஷ் (22). இவர் டிப்ளமோ பட்டதாரி. உறவினர் ஒருவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் உதவியாக இருந்து வந்துள்ளார்.
 
ராஜேஷ் நேற்று மாலை 6 மணி அளவில் தனது நண்பர் ஆனந்த் (22) என்பவருடன் ஆவாரம்பாளையம் அருகே, தனது உறவினர் அலுவலகத்துக்கு சென்று விட்டு நடந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
அப்போது 9 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேஷ் மற்றும் ஆனந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆனந்த் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனால் ராஜேஷ் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அந்த கும்பல் ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளது.
 
பின்னர் ராஜேசின் தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து ராஜேஷை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
ஆனால் ராஜேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது தொழில் போட்டியா? என்பது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்