முத்துராமலிங்க தேவரை போற்றிப் புகழும் ஸ்டாலின்: என்ன சொல்கிறார்?

திங்கள், 31 அக்டோபர் 2016 (11:25 IST)
முத்துராமலிங்கத் தேவர் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும். அப்போதுதான் அந்த மொழிக்கு நாம் மரியாதை செலுத்தியவர்கள் ஆவோம் என்று ஆணித்தரமாக குரல் எழுப்பியவர் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
முத்துராமலிங்க தேவர் அவர்களின் 109வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பசும்பொன்னில் இருக்கும் தேவர் பெருமகனார் நினைவிடத்திற்குச் சென்று, அவருடைய 109 வது பிறந்த நாள் விழா மற்றும் குரு பூஜையில் கலந்து கொண்டு, தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்மை சுற்றியுள்ள மாநிலங்கள் எல்லாம் நதி நீர் பிரச்சினையில் நம்மை வஞ்சிக்க முயற்சிக்கின்ற நேரத்தில் “இந்த தேசத்தின் அஸ்திவாரம் விவசாயிதான்” என்று கூறிய தேவர் திருமகனாரின் கருத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
 
தமிழ் மொழியின் மீது தீராக் காதல் கொண்ட தேவர் பெருமகனார், “தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும். அப்போதுதான் அந்த மொழிக்கு நாம் மரியாதை செலுத்தியவர்கள் ஆவோம்” என்று ஆணித்தரமாக குரல் எழுப்பியவர். சுதந்திரப் போராட்ட வீரரான அவரின் சேவைகளை தமிழகமும், இந்த நாடும் என்றும் மறக்க முடியாது. நாமும் மறக்க முடியாது.
 
அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நெஞ்சில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்தவர். பாடுபட்டவர். அப்படிப்பட்ட  தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.
 
நாடு போற்றும் தலைவருக்கு இன்றைய தினம் அவரது நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதில் பெருமையடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்