இந்த நேரத்துல ஸ்டாலின் அரசியல் செய்யமாட்டார்னு நம்புறோம்! – செல்லூரார் நம்பிக்கை!

புதன், 1 ஏப்ரல் 2020 (12:43 IST)
இந்த இக்கட்டான சூழலிலும் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யமாட்டார் என நம்புவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எதிக்கட்சியான திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிலரும் தமிழக அரசு முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கொரோனா விவகாரத்தில் அரசுக்கு துணையாக அனைத்து கட்சிகளும் செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யமாட்டார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா சிகிச்சையளிக்க பயன்படுத்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் முன்வந்து அளித்துள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்