ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடமாற்றம்

வியாழன், 27 நவம்பர் 2014 (14:56 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 வருடம் ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் 20 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 
இவ்வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் 6 வாரங்களுக்குள் அதாவது டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடக ஐகோர்ட்டுக்கு மனுதாரர்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு நீதிமன்றப் பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சோமையா ராஜூக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்