3 ஆவது திருமணத்திற்குத் தடையாக இருந்த, 2 ஆவது மனைவியை கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவர்

புதன், 25 பிப்ரவரி 2015 (12:11 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, 3 ஆவது திருமணத்திற்குத் தடையாக இருந்த, தனது 2 ஆவது மனைவியை கணேசன் என்பவர் கொலை செய்து சடலத்தை தனது வீட்டுக்குளளேயே புதைத்துள்ளார்.
 
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர்  32 வயதுடைய கணேசன். இவர் தனது மனைவி 25 வயடைய வெண்ணிலாவை கொலை செய்து, வீட்டுக்குள் புதைத்துவிட்டதாக உறவினர்களிடம் கூறிவிட்டு  தலைமறைவாகி விட்டார்.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், வருவாய்  கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை ஆணையர், தடயவியல் நிபுணர் முன்னிலையில், வீட்டில்  புதைக்கப்பட்டிருந்த வெண்ணிலாவின் உடலைத் தோண்டி எடுத்தனர். பின்னர் அதே இடத்தில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். 
 
இது குறித்த நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின, கணேசனின் முதல் மனைவி கவிதா. திருமணமான 3 மாதத்திலேயே அவரை விட்டு பிரிந்து போய்விட்டார். அதன் பிறகு கணேசனுக்கு, தர்மபுரியைச் சேர்ந்த வெண்ணிலாவோடு காதல் ஏற்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வெண்ணிலாவை கணேசன் திருமணம் செய்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கோவை, தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குச்சென்று, இருவரும் தங்கி வேலை செய்துள்ளனர். இவர்களது குழந்தை வீரலட்சுமியை, தளவாய் பட்டினத்தில் வசிக்கும் கணேசனின் தாயார் வளர்த்து வந்தார். 
 
கடந்த 17 ஆம் தேதி வெண்ணிலாவும், கணேசனும் கோவையிலிருந்து தாராபுரம் வந்துள்ளனர். அப்போது, 32 வயது மதிக்கத்தக்க வேறொரு  பெண்ணை கணேசன் அழைத்து வந்துள்ளார். அவரை 3 ஆவது திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். இது வெண்ணிலாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அவர்கள் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் கணேசனின் அக்கா முருகேஷ்வரி தட்டிக்கேட்டுள்ளார்.
 
இதன்பிறகு வெண்ணிலா காணாமல் போயுள்ளார். இதனால், நேற்று  முன்தினம் மீண்டும் கணேசனிடம் அவரது அக்கா விசாரித்துள்ளார். அதற்கு வெண்ணிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்றும், எனவே வெண்ணிலாவின் உடலை  வீட்டிற்குளேயே புதைத்து சமாதி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், இந்த சம்பவம் காரணமாக, காவல்துறையினரிடம் சரணடைந்து விடுவதாகக் கூறிய அவர், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என்று காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள கணேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்