சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மீண்டும் கைது

வெள்ளி, 1 ஜனவரி 2016 (06:08 IST)
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 

 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக நல அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும், இதே கோரிக்கையை முன்வைத்து பல முறை போராட்டம் நடத்திய மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், சென்னை, திருவான்மியூரில் அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காரில் சென்றார்.
 
அப்போது மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவான்மியூர் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இதனால், மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பின்பு, மாலை நேரத்தில் அவர்கள் இருவரையும் விடுதலை செய்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்