மதுரை சித்திரை திருவிழா ரத்து: மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் நேரடி ஒளிபரப்பு

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:55 IST)
மதுரை சித்திரை திருவிழா ரத்து
மதுரை என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது சித்திரைத் திருவிழாதான். சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம், திருத்தேர் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை பக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படுவது உண்டு. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையைச் சுற்றி உள்ள நகரங்களில் இருந்து லட்சக் கணக்கானோர் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வழக்கமாக ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோவிலில் நடைபெறும் என்றும் ஆனால் அதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் திருக்கல்யாணம் நடைபெறும் மே 4ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்