விஜயகாந்த் மீதான 14 கிரிமினல் வழக்குகளை விசாரிக்கத் தடை

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (10:28 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்களை அவதூறாக சித்தரித்துப் பேசியதாக, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது தமிழ்நாடு முழுவதும் 14 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
 
இவ்வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் நீதிமன்றங்கள் சம்மன்கள் அனுப்பியிருந்தன. பிடிவாரண்ட்டுகளும் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
 
இதை எதிர்த்தும், தங்கள் மீதான அவதூறு வழக்குகளில் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விஜயகாந்தும், பிரேமலதாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
 
நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் புதனன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்