நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.
இந்நிலையில் அதிரடி திருப்பமாக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ்-ஐ அவரது வீட்டிற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் நான் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தருகிறேன். ஏனெனில், ரவுடிகளின் கூடாரமாக அதிமுக மாறிவிடக் கூடாது என கருதுகிறேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் காக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.