காதலி விபத்துக்குள்ளான இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்

வியாழன், 26 மார்ச் 2015 (17:59 IST)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தனது காதலியின் பிரிவைத்தாங்க முடியாத காதலன், காதலி விபத்துக்குள்ளான இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். 26 வயதுடைய இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 
இவர் ஜெயமாலா என்னும் பெண்ணை காதலித்து வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 6 ஆம் தேதி இருவரும் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
 
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில், சில்வார்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையைக் கடந்து சென்றபோது, நிலை தடுமாறி கீழே சாய்ந்தது.
 
இந்த விபத்தில் காதல் ஜோடிகளான அவர்கள் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஜெயமாலாவிற்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமாலா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெயமாலாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஆனந்த குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், தனது காதலி விபத்தில் சிக்கிய  இடத்திற்கு அருகில் சாலையோரத்தில் இருந்த  மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்