''லியோ சிறப்புக்காட்சி கோரிக்கை''- புளூசட்டை மாறன் விமர்சனம்

திங்கள், 2 அக்டோபர் 2023 (17:15 IST)
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு  போதுமான நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடக அரசு கூறிவருகிறது. தமிழகத்திற்கு நீரை திறந்துவிட  கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  தமிழ் சினிமா நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தை பற்றி  சினிமா  விமர்சகர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சுப்ரீம் கோர்ட், காவிரி ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு பலமுறை.. போதுமான நீரை திறந்து விடமாட்டோம் என கர்நாடக அரசு கூறும்.

கன்னட நடிகர்கள் மக்கள் மத்தியில் நின்று தங்கள் மாநிலத்திற்கு போராடுவார்கள். ஆக்ரோசமாக பேசுவார்கள்.

இம்முறையும் அதையேதான் செய்தார்கள். காவிரி எங்கள் சொத்து என்று சில தினங்களுக்கு முன்பு..போராட்டத்தில் சிவராஜ்குமார் பேசினார்.

நதி என்பது நாட்டின் சொத்து என்று தெரிந்தும்.. அதை மாநில சொத்து என்கிறார்.

ஆனால்... ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தை பாருங்கள்.

மௌன போராட்டமாம். மௌனமாக இருக்க ஏன் போராட வேண்டும்? அதற்கு ஒரு மேடை, பல மைக்குகள், ஏகப்பட்ட சேனல்கள் வேறு.

வாய் திறந்து பேசினால்.. தங்கள் படம் கர்நாடகத்தில் ரிலீஸாகாது எனும் பயம்தானே அதற்கு காரணம்?

அப்போதாவது.. அட்லீஸ்ட் மௌன போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது மௌனம் மட்டுமே. போராட்டம் இல்லை.

லியோ படத்திற்கு ஐந்து காட்சிகள் அனுமதி தேவையென பாரதிராஜா தலைமையில் அரசுக்கு கோரிக்கை வைப்பது போன்ற அத்யாவசிய பிரச்னைகள் இருப்பதால்.. காவிரி நீர் உரிமை பற்றி பேச நேரமில்லை போல.

ஈழம், காவிரி, நெய்வேலி என பல விவகாரங்களில் போராடிய இயக்குனர் இமயம், தன்மானத்தமிழர் பாரதிராஜா.. இன்று லியோவிற்கு சிறப்புக்காட்சி கோரிக்கை வைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது காலம் செய்த கோலம்.

லியோ சிறப்புக்காட்சி கோரிக்கையை வைக்க சொல்லி இந்த இமயத்தை உசுப்பி விட்ட நல்லவர் யாரோ?’’ என்று தெரிவித்துள்ளார்.

 
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்