'கத்தி' நாளை திட்டமிட்டபடி வெளியாகும் - விஜய்

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (13:20 IST)
கத்தி திரைப்படத்தின் விளம்பரத்திலிருந்து லைக்கா நிறுவனத்தின் பெயரை நீக்கி, நாளை இத்திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம். சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர். எனவே இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது.
 
எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் 'கத்தி' திரைப் படத்தை சந்தோஷமாக கண்டு களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
'கத்தி' திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல் துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால் நாளை இத்திரைப்படம் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று நம்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்