கருணாநிதி மீது ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு

செவ்வாய், 24 நவம்பர் 2015 (15:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி மற்றும ஆனந்த விகடன் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
ஜெயலலிதா சார்பில், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்குறைஞர் 2 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
 
அவர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:–
 
ஆனந்த விகடன் வாரப் பத்திரிகையில்  "ஆட்சி அதிகாரம் செல்வாக்கு பண பலம் என்ன செய்தார் ஜெயலலிதா?" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது.
 
இந்த செய்தியில், ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. உள் நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
 
எனவே, இந்த அவதூறு செய்தியை வெளியிட்ட ஆனந்தவிகடன் பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இந்த செய்தியின் அடிப்படையில் முரசொலி பத்திரிகையில் திமுக தலைவர் மு.கருணாநிதி, "4 ஆண்டு ஆட்சியில் சாதித்தது என்ன?" என்ற தலைப்பில் கேள்வி–பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதிலும், ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக வார்த்தைகள், கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
 
எனவே, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்