கமல்ஹாசன் படிப்பறிவில்லாத பகட்டு முட்டாள்: சுப்பிரமணியன் சுவாமி பதில் தாக்குதல்!

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (16:39 IST)
நடிகர் கமல்ஹாசனுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே டுவிட்டரில் ஒரு போரே நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி தங்கள் தரத்திற்கு ஏற்ப ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.


 
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்தார். தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பொது மக்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 
அதே போல நடிகர் கமலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அன்று முதல் நடிகர் கமலை விமர்சிக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியன் சுவாமி. கமலும் அவ்வப்போது அவருக்கு பதிலளித்து வந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் நேற்று சுப்பிரமணியன் சுவாமி கமலை முதுகெலும்பில்லா முட்டாள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கமல் நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள் சார் என பதிவிட்டார்.


 


இதற்கு தற்போது சுப்பிரமணியன் சுவாமி பதில் டுவீட் செய்துள்ளார், அதில் கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள். ஏனெனில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய கமல் நான் தமிழர்கள் அனைவரையும் பொறுக்கி என கூறியதாக வேண்டுமென்றே தவறாக கூறுகிறார் என கூறியுள்ளார்.


 
 
மேலும் டுவிட்டரில் அவரது ஆதரவாளர் ஒருவருக்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் என குறிப்பிட்டார். இந்த டுவிட்டர் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. எப்பொழுது முடியும் என்பது கேள்விக்குறி தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்