ஜெயலலிதாவை சீண்டும் கமல்: என்னுடைய முதல்வர் பினராயி விஜயன்; நான் ஒரு மலையாளி!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:31 IST)
நடிகர் கமல் ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது.


 
 
இந்த விருதை பெரும் கமலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள கமலுக்கு கேரள முதல் பினராயி விஜயன் வாழ்த்து கூறினார்.
 
இதற்கு நன்றி தெரிவித்து கமல் அனுப்பிய செய்தியை கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக்கில் கேரள முதலமைச்சர் அலுவலகம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அதில், என்னுடைய செவாலியே விருது பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கு மிகுந்த நன்றி. ஒருவர் கூறினார், எப்படி மற்றொரு மாநில முதல்வர் உங்களை இப்படி பாராட்டுகிறார் என்று. அதற்கு பின்னர் பதில் அளித்த நான் அவர் மற்றொரு மாநிலத்தின் முதல்வர் அல்ல, என்னுடைய மாநிலத்தின் முதல்வர். மலையாள திரைப்படங்களுக்கு செல்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்று. இவ்வாறு அந்த பதிவில் கமல் கூறியதாக இருந்தது.
 
நடிகர் கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டது முதல் பலரும் வாழ்த்து கூறிவரும் வேளையில் முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாழ்த்து கூறவில்லை. நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் உள்ளிட்டோர், கமலுக்கு மோடி, ஜெயலலிதா ஏன் பாராட்டு தெரிவிக்கவில்லை, அவருக்கு பரிசுத் தொகை அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.
 
ஆனாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததால், ஜெயலலிதாவை இதன் மூலம் சீண்டவே கமல் தான் ஒரு மலையாளி எனவும், தனது முதல்வர் பினராயி விஜயன் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்