ஜெயலலிதாவின் சிகிச்சை: மீண்டும் ஒரு பொது நல வழக்கு!

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (15:23 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை குறித்து கண்காணிக்க பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்கள் என மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்த தகவலை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில் பிரவீணா என்பவர் ஒரு பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவர் ஆர்.கே. நகரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
 
இவர் தாக்கல் செய்த மனுவில், முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அதில் அரசு மருத்துவர்கள், நீதித்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் உறவினர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்