ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நடிகை

வியாழன், 9 அக்டோபர் 2014 (07:19 IST)
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, நடிகை மாயா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
 
தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் மாயா. இவர் தனது மகள் குணப்பிரியாவுடன் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.
 
ஆணையர் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த அவர், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைக்க முயற்சித்தார்.
 
இதைப் பார்த்த காவல் துறையினர், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும்“ என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர், அவரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரை எச்சரித்தனர். பின்னர் மாயாவை காவல் துறையினர் தங்கள் ஜீப்பில் ஏற்றிச் சென்று சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்