அப்போ ஆன்மீக சுவாமி இப்போ அருமை சகோதரர் - ஜெயக்குமார் அந்தர் பல்டி

புதன், 11 ஏப்ரல் 2018 (11:03 IST)
நேற்று போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியது நான் வரவேற்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வாலஜா சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 
அப்போது அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது.
 
அந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “ வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது..  இந்த விவகாரத்தில் அருமை சகோதரர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை நான் வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 
இதற்கு முன்பு ஆன்மீக சுவாமி மலை ஏறிவிட்டார், அறைக்குள் அரசியல் நடத்தின் ஆன்மீகவாதி என்றெல்லாம் ரஜினியை கிண்டலடித்த ஜெயக்குமார், தற்போது அருமை சகோதரர் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்