ஜனவரி 1ஆம் தேதி ஊழல்கள் லிஸ்ட் ரிலீஸ்: ஆம் ஆத்மி கட்சி

திங்கள், 28 டிசம்பர் 2015 (23:00 IST)
ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசுதுறையில் நடைபெற்ற ஊழல்கள் வெளியிடப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு தலைவர் வசீகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசின் ஊழல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சிதான் வெளியிட்டது. அதுபோலவே, தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை ஜனவரி 1ஆம் தேதி வெளியிட உள்ளோம்.
 
தமிழகத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அது குறித்து, தமிழக கவர்னரிடம் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் குறித்து புகார் பட்டியலை அளித்துள்ளன.
 
இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலமாக உள்ளது. தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதுபோல்,  2016 சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்