அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!

செவ்வாய், 17 ஜனவரி 2017 (12:06 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று தனது அரசியல் நிலைகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளான இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக முன்னதாகவே கூறியிருந்தார் ஜெ.தீபா.


 
 
அதன் படி இன்று காலை எம்ஜிஆர் சிலை மற்றும் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா அதன் பின்னர் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல் முறையாக ஊடகத்தின் முன்னிலையில் உரையாற்றினார் அவர்.
 
அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தான் மக்கள் பணி ஆற்ற இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் புதிய கட்சி ஆரம்பிக்கிறாரா எப்படி அரசியலில் ஈடுபட இருக்கிறார் போன்ற எதையும் சொல்லவில்லை.
 
தனது அடுத்த அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தெரிவிக்க இருப்பதாக கூறினார். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பது தனது ஆசை என அவர் தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெ.தீபா நான் ஓடிவிடுவேன், மறைந்துவிடுவேன், அரசியலை விட்டு விலகிவிடுவேன் என நினைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக எனது அரசியல் பயணம் உறுதி என்பதை தெரிவிக்கவே இந்த சந்திப்பு எனவும். உரிய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்