பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன்

வியாழன், 5 நவம்பர் 2015 (12:04 IST)
11 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மதுரையை சேர்ந்த ஐடிஐ மாணவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த ஐடிஐ மாணவன் இந்த பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். ஆனால் கடந்த செவ்வாய் கிழமை பாதிக்கப்பட்ட 17 வயதான 11 ஆம் வகுப்பு மாணவி தனது பெற்றோரிடம் இந்த பலாத்கார சம்பவத்தை தெரிவித்ததையடுத்து இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
 
மதுரை, கே புதூரில் உள்ள தனியார் ஐடிஐ யில் முதலாம் ஆண்டு படித்து வரும் இந்த மாணவன், திருமங்கலம் அருகே உச்சம்பட்டி காலனி தெருவை சேர்ந்த 19 வயதான தினேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளான். தினேஷ்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாகவும், சமிபத்தில் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
 
பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து, இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோர் காவல் துறையினரை நாடினர்.
 
திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் குமாருக்கு எதிராக குழந்தைகள் பாலியல் குற்றங்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்