ஏகப்பட்ட குளறுபடி : விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா?

செவ்வாய், 5 டிசம்பர் 2017 (14:43 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க, அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
 
விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு எதிராக அர்சு திரும்பும் எனக்கூறி, ஒருபக்கம் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் பணியில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதில் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. விஷால் நேரில் வந்து பேசவேண்டும் என சேரன் தரப்பு கூறிவிட்டது. எனவே, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்புமனுவில் விஷால் அளித்துள்ள உறுதிமொழி, சொத்து கணக்கு விவரங்கள் முறையாக இல்லை எனக்கூறி அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.
 
எனவே, கடும் எதிர்ப்பு காரணமாக விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனை இழுபறியில் இருக்கிறது. 
 
விஷாலின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்