நிவேதா எனக்கு துரோகம் செய்தார் ; கொலை செய்தேன் : இளையராஜா உருக்கம்

புதன், 10 மே 2017 (12:02 IST)
தனக்கு துரோகம் செய்ததால் நிவேதாவை கொலை செய்து விட்டேன் என இளையராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

 
கோவையை சேர்ந்த நிவேதா என்ற ஆசிரியரை, அதே கோவையை சேர்ந்த இளையராஜா என்பவர் சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்த விவகாரம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு பின் முக்கோண கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. 
 
இந்நிலையில், கைதான இளையராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
 
நான் கோவையில் நிவேதா தங்கியிருக்கும் அதே அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தேன். அவரின் நிவேதாவின் தாயாருக்கு நிறைய உதவிகள் செய்து வந்தேன். அதனால், நிவேதாவிற்கு என்னை பிடித்துப் போனது. என் மீது காதலும் ஏற்பட்டது. கணவரை பிரிந்து இருப்பதால், அவர் அன்புக்கு ஏங்கினார். அந்த அன்பை நான் கொடுத்தேன். 
 
குடும்பசூழல் காரணமாக எனக்கு திருமணம் நடந்த போதும் கூட நான் நிவேதாவுடனான உறவை துண்டிக்கவில்லை. அவரை தொடர்ந்து நேசித்து வந்தேன். 
 
இந்நிலையில், கணபதி எங்கள் காதலுக்கு குறுக்கே வந்தார். பேஸ்புக் மூலம் நிவேதாவுடன் பழகி, ஆசை வார்த்தைகளை கூறி அவரை மயக்கினார். தனக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக கூறி நிவேதாவிடமிருந்து பணம் பறித்து வந்தார். அவரின் உறவை விட்டு விடுமாறு நான் பலமுறை கூறியும் நிவேதா அதை கேட்கவில்லை.
 
மகளை பார்க்க வேண்டும் என நிவேதா கூறியதால், அவரை சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போது, அண்ணாநகரில் கணபதியை பார்க்க வேண்டும் என கூறினார். அவரின் உறவை முறித்து விட்டு வா எனக்கூறினேன். ஆனால் அவரோ, கணபதியுடன் நெருக்கமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவேதான், அவர் மீது காரை ஏற்றி கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்