இவர் கட்சியிலிருந்து விலகினால்தான் டெபாசிட்டாவது கிடைக்கும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (12:42 IST)
பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியில் இருந்து விலகினாலே பாஜக கட்சிக்கு தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் 2015 செப்டம்பர் 27-ந்தேதி காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாக நாகர்கோவில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நேற்று புதனன்று விசாரணைக்கு வந்தபோது, விஜயதாரணி ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்களும் விசாரணைக்கு வரவில்லை. இதனால், கோபமடைந்த நீதிபதி விசாரணைக்கு ஆஜராகாத விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இளங்கோவன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘’ஜெயலலிதா, நரேந்திரமோடியை சந்தித்ததன் நோக்கம் தமிழக மக்களின் நலனுக்காக அல்ல. அவர் மீதுள்ள வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சந்தித்தார்.
 
பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியில் [பாஜகவில்] இருந்து விலகினாலேதான் அந்த கட்சிக்கு தேர்தலில் டெபாசிட்டாவது கிடைக்கும்’’ என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்