இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட்டால் பாஜக ஆதரிக்குமா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்

புதன், 3 ஜூன் 2015 (13:31 IST)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட்டால் பாஜக ஆதரிக்கும் என்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மிஸ்டு கால் மூலம் தமிழகத்தில் சுமார் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை தற்போதும் 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்த கூட்டத்தில் நாங்கள் எடுத்துரைத்தோம்.
 
சென்னை ஐஐடியில் ஒரு மாணவர் அமைப்பு தடை செய்யப்படுவது அந்த ஐஐடியின் முதல்வர் எடுக்கக்கூடிய நிர்வாகம் சார்ந்த முடிவு. மாணவர்கள் இடையில் பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் தோன்றுகிறது. இதனை அரசியலாக்கக்கூடாது. இதை அரசியலாக்கி அத்தனை அரசியல் கட்சிகளும் அந்த ஐஐடி வளாகத்தில் போராட்டத்தை நடத்தி அரசியல் செய்கிறார்கள்
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை நாங்கள் தொடர்புகொண்டு பேசிவருகிறோம். தேமுதிகவினர் தங்கள் வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் எங்கள் கூட்டணி வேட்பாளராகத்தான் இருப்பார். பாஜக அந்த வேட்பாளரை ஆதரிக்கும்” என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்