எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் எச்.ராஜா தான் காரணம்: அய்யக்கண்ணு பரபரப்பு பேட்டி!

திங்கள், 24 ஜூலை 2017 (15:38 IST)
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அவர்களுக்கு தினமும் கொலை மிரட்டல் விடுத்து பல போன் கால்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யக்கண்ணு திருச்சியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.


 
 
அய்யக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தொலைப்பேசிகள் மூலமாக மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என திருச்சியில் பேட்டியளித்த அய்யாக்கண்ணு கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
மேலும் உங்களை அரசுக்கு எதிராக போராட முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தூண்டி விடுகிறார்கள். சென்னைக்கு வந்து எடப்பாடி வீட்டின் முன்பு அம்மணமாக போராடுங்கள் ஏன் டெல்லியில் போராடுகிறீர்கள் என தினமும் பல போன்கள் வருவதாக கூறிய அய்யாக்கண்ணு எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எச்.ராஜாதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்