கடந்த 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக நீலகிரியில் பயணம் மேற்கொண்டபோது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக வீடியோ வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக பரவியது.
இந்நிலையில், இன்று காலை கோவையில் இது குறித்து விளக்கம் அளித்த ஸ்டாலின், ''ஆட்டோ டிரைவரை தாக்கியதாக வெளியான வீடியோ திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதையும் மீறி மக்களை சந்திக்க இடையூறாக இருப்பவர்களை நான் கடுமையாக அதட்டுவது உண்மை தான். ஆனால் அதை அரசியலாக்க, கிராஃபிக்ஸ் செய்து இந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள்.
எப்படி ஜெயலலிதா, சிறுதாவூர் பங்களாவில் இருந்து கொண்டு, அரசு பணிகளை செய்வதாக கிராஃபிக்ஸ் செய்து படத்தை வெளியிடுகிறார்கள், அதேபோல் இதையும் செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.