நான் சசிகலாவின் விசுவாசி: தமிழக அரசை சரமாரியாக சாடும் கருணாஸ்!

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:43 IST)
அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார். மேலும் தான் சசிகலாவின் விசுவாசி என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.


 
 
நடிகர் கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக உடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணிக்கு தீவிர ஆதரவாளராக இருந்தார்.
 
இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதால் நடிகர் கருணாஸ் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக அமைச்சர்கள் கூறுவதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. கல்விக்கொள்கை, சமூக நீதி திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு, மாநில உரிமை என எதிலும் ஜெயலலிதா கடைபிடித்த கொள்கையை தற்போது உள்ள அரசு கடைபிடிக்கவில்லை.
 
மத்திய அரசு சொல்வதை அப்படியோ கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகிறார்கள். இதன் மூலம் அதிமுக ஆட்சி ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஆட்சியாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக உருப்படியான எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எல்லா மட்டத்திலும் லஞ்சம் கேட்கிறார்கள்.
 
இதனை சகித்துக்கொள்ள கூடாது என்பதற்காக இப்போது வெளிப்படையாக கூறுகிறேன். இந்த ஆட்சி இனிமேலும் தொடர் எம்எல்ஏவான எனக்கு விருப்பம் இல்லை என்றார் கருணாஸ். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தாலும் அந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் சசிகலா தான். எனவே அந்த விசுவாசம் எனக்கு உள்ளது என கூறினார் கருணாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்