ஆண்மையற்ற அதிமுகவினர் ; விளாசிய குருமூர்த்தி : பொங்கி எழுந்த ஜெயக்குமார்

செவ்வாய், 26 டிசம்பர் 2017 (16:18 IST)
பாஜகவின் ஆதரவாளரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி அதிமுகவினர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-ஓ.பி.எஸ் தரப்பு, தினகரன் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுத்தது.
 
அந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆண்மையில்லாத அதிமுக தலைவர்கள் தினகரன் ஆதரவாளர்கள் மீது 6 மாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட அதிமுகவினர் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.
 
இதையடுத்து, இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “குருமூர்த்தி முகம் இல்லாதவர். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஆண்மையற்றவர்கள்தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். இருப்பவர்கள் பேச மாட்டார்கள். அவர் இப்படி பேசுவதை ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளைகள். காங்கேயம் காளைகளைப் போல இயக்கத்தை கட்டிக் காத்து வருகின்றனர்” எனப் பேசினார். மேலும்,  அவசியம் எனில் குருமூர்த்தி மீது வழக்கு தொடருவது பற்றி பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
 
இதற்கு தன் டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள குருமூர்த்தி “ எடப்பாடி தலைமையிலான அரசை நான் என்னுடைய துக்ளக் பத்திரிக்கையில் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். பலவீனமான அதிமுக தலைமை பற்றி நான் இப்போது முதல் முறையாக கூறவில்லை. 
 
எனது அறிவுரைப்படி, தமிழக அரசு இயங்க வில்லை என தெரிவித்த அமைச்சருக்கு நன்றி. நான் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து என்னுடைய கருத்துகளை தொடர்ந்து நான் கூறுவேன். அது அவர்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்